துபாய்: ஐக்கிய அரபு நாடுகள் அருகே கடலில் சென்றுக் கொண்டிருந்த பனாமா நாட்டு எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதால் 2 இந்திய மாலுமிகள் பலியாகினர். 10 ஊழியர்கள் மாயமாகினர். பனாமா நாட்டு எண்ணெய் கப்பல் ஒன்று 12 ஊழியர்கள் உள்பட 55 பேருடன் கடலில் சென்று கொண்டிருந்தது. கடந்த புதன் கிழமை ஐக்கிய அரபு நாடுகள் அருகே 21 மைல் தொலைவில் கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த கப்பலில் தீப்பிடித்தது. தீ மளமள என பரவியது. இது பற்றி அறிந்த ஐக்கிய அரபு நாட்டின் அதிரடி மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விரைந்து சென்று போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் இந்திய மாலுமிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது தவிர கப்பலில் இருந்த 10 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஐக்கிய அரபு நாட்டின் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.