×

ஜம்முவில் லாரியில் மறைந்து வந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : காட்டில் அதிரடி சண்டை

ஜம்மு: ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் பதுங்கி வந்த  தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்றன. ஜம்மு காஷ்மீரின் நக்ரோடா மாவட்டத்தில் ஜம்மு-நகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பான் சோதனை சாவடி வழியாக அதிகாலை 5 மணிக்கு லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை பாதுகாப்பு படைகள் தடுத்து நிறுத்தின. அப்போது, லாரியில் இருந்து திடீரென குதித்த  தீவிரவாதிகள் கும்பல், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. மேலும், கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியது.  பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். அப்போது, சாலையோரம் உள்ள காட்டுப் பகுதிக்குள் தீவிரவாதிகள் தப்பியோடினர். ஆனால், பாதுகாப்பு படையினர் விடாமல் துரத்திச் சென்று அவர்களை வேட்டையாடினர்.

இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் போலீசார் ஒருவர் காயமடைந்தார். தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு தீவிரவாதி காட்டு பகுதிக்குள் தப்பி சென்று மறைந்தான். தீவிரவாதிகள் வந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் மக்பூல் என்பவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரகசிய அறையில் பதுங்கல்

சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் 3 பேரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் லாரியில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய அறையில் ஆயுதங்களுடன் பதுங்கி வந்துள்ளனர்.

டிரோன் மூலம் தேடுதல்

லாரியில் பதுங்கி வந்த 4 தீவிரவாதிகளில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஒரு தீவிரவாதி மட்டும் காட்டில் மறைந்துள்ளான். அவரை தேடி வேட்டையாடுவதற்காக ராணுவ ஹெலிகாப்டர்களும், ஆளில்லா கண்காணிப்பு கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Tags : Action fight ,militants ,Jammu ,jungle ,Terrorists , 3 Terrorists, shot dead,Jammu:
× RELATED ஜம்முவின் லித்தியத்தை கொள்ளையடிக்கும் பாஜ: மெகபூபா முக்தி கடும் தாக்கு