புதுடெல்லி: தமிழகத்தில் இருக்கும் அனைத்து தொண்டு நிறுவனங்களையும் முறைப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம், தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது. தமிழகத்தில் செயல்படும் தொண்டு நிறுவனங்களை சிபிஐ கண்காணித்து சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்படுகிறதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்கிறது. தமிழகத்தில் இருக்கும் சில தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி உதவியை பெற்றுக்கொண்டு அரசியல் செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
“தமிழகத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் முறையாக செயல்படவில்லை என்றும், அதில் கிடைக்கப்பெறும் நிதி குறித்து உரிய கணக்குகளை வைத்திருப்பது கிடையாது. எனவே இவற்றை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்’’ என தமிழகத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நேற்று விசாரித்தனர். மனுவில் உள்ள சாராம்சங்கள் குறித்து நீதிபதிகள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளை நாடாமல் எதற்காக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்தனர்.