×

ரசாயன கழிவுநீரை தேக்கி வைக்கும் குட்டையாய் உருமாறிய நரசிங்கபுரம் ஏரி

வேலூர்:  ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு கட்டுப்பாட்டில் 565 ஏரிகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களும், குட்டைகளும், பாசன கால்வாய்களும், ஏரிக்கால்வாய்களும் உள்ளன. இதுபோக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படுவதாக கூறப்பட்டாலும் அந்த பணிகள் விதிகளின்படி நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகப்பெரிய ஏரியாகவும், கொக்குகள், நாரைகள் என நீர்வாழ் உயிரினங்களுடன் மிகப்பெரிய ஏரியாக விளங்கிய ராணிப்பேட்டை நரசிங்கபுரம் ஏரி இன்று குட்டையாக சுருங்கி போயுள்ளதுடன், தொழிற்சாலை கழிவுநீரை தாங்கி நிற்கும் பரிதாப நிலைக்கு மாறியுள்ளது அப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இதுதொடர்பாக நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் கூறும்போது, ‘பல ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஏரிதான் இங்குள்ள பல கிராமங்களின் விவசாயத்துக்கான நீராதாரமாக விளங்கி வந்தது. ஏறத்தாழ 25 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரிக்கு வள்ளிமலை, மேல்பாடி, சீக்கராஜபுரம், கல்மேல்குப்பம் பகுதிகளில் உள்ள மலைகளில் இருந்து வரும் சிற்றோடைகளே நீராதாரமாக விளங்கியது.

இந்நிலையில் இங்கு சிப்காட் தொழிற்பேட்டையால் சிறு, குறு தொழிற்சாலைகள் குறிப்பாக ரசாயன தொழிற்சாலைகள் பெருகிய நிலையில் ஏரிக்கான நீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது. தற்போது பருவ மழை சீசனின்போது பெய்யும் மழைநீரே ஆதாரமாக விளங்கி வருகிறது. அந்த நீரும் ஏரியில் கலந்தவுடன் ரசாயன நீராக மாறி விடுகிறது. ஏனெனில் இந்த ஏரியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர் வந்து கலப்பதுதான் காரணம். எனவே, இந்த ஏரியின் கரையை உயர்த்தி, ரசாயன கழிவுநீரின் வரத்தை தடுத்து நீர்வரத்து கால்வாய்களை புனரமைத்தும், ஏரியை தூர்வாரியும் நரசிங்கபுரம் ஏரிக்கு புத்துயிரூட்ட வேண்டும்’ என்றனர்.

Tags : Narasingapuram Lake ,reservoir , Storing chemical wastewater Narasingapuram Lake, which has transformed into Kuttai
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...