×

பாலியல் தொடர்பான வழக்கு விசாரணைகளில் 50 வாய்த்தாக்களுக்கு வராமல் நித்தியானந்தாவுக்கு விலக்கு அளித்தது எப்படி ? : நீதிபதி குன்ஹா வியப்பு

பெங்களூரு: நித்தியானந்தாவை நேரில் சந்தித்து சம்மனை வழங்க போலீசுக்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹா உத்தரவிட்டுள்ளார். நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்று கர்நாடக போலீசிடம் கேள்வியெழுப்பிய நீதிபதி, நித்தியானந்தாவிடம் சம்மனை அளித்தது தொடர்பான விவரத்தை திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிக்குள் தெரிவிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 50 வாய்தாக்களுக்கு மேல் ஆஜராகாத நித்தியின் ஜாமினை ரத்து செய்ய கோரி லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

50 வாய்தாக்களுக்கு மேல் ஆஜராகாத நித்தி


சர்ச்சை சாமியாரான நித்யானந்தா மீது 2010ல் பாலியல் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் பெற்று நித்தியானந்தா வெளியே வந்துள்ளார். பாலியல் வழக்குத் தொடர்பாகக் கடந்த 9 ஆண்டுகளாகக் கர்நாடக ராம் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும்,  லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில், ராம்நகர நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.  

பாலியல் புகாரில் சிக்கியுள்ள நித்தியானந்தாவுக்கு எதிராக 2 வழக்குகள் மீது, கர்நாடக நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. பாலியல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது ராம்நகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 50 வாய்தாக்களுக்கு மேல் நித்தியானந்தா நேரில் ஆஜராகவில்லை.இதனை தொடர்ந்து, அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று  நேற்று முன்தினம் மீண்டும் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார் லெனின் கருப்பன். லெனின் கருப்பனின் மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நரேந்திரா முன்பு விசாரணைக்கு வருகிறது.

நித்தியானந்தாவுக்கு நேரில் சென்று சம்மன் தருக


இந்நிலையில் நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்யகோரிய மற்றொரு வழக்கு, நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்று கர்நாடக போலீசிடம் உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹா கேள்வி எழுப்பினார். இதற்கு நித்தியானந்தா இந்தியாவிலேயே இல்லை என்று வழக்கு விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் பதில் அளித்தார்.

நித்தியானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் சர்வதேச போலீசாரால் வழங்கப்பட்டுள்ள போதிலும் 50 வாய்த்தாக்களுக்கு வராமல் நித்தியானந்தாவுக்கு விலக்கு அளித்தது எப்படி என்று நீதிபதி குன்ஹா வியப்படைந்தார். நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் காலாவதியாகி அவர் வெளிநாட்டில் உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது உண்மை தானா ? என்றும் விசாரணை அதிகாரியிடம் நீதிபதி கேட்டறிந்தார்.

இதையடுத்து உடனடியாக விசாரணை அதிகாரி நேரடியாக நித்தியானந்தாவின் இருப்பிடத்திற்கு சென்று அவரிடம் ஜாமீன் ரத்து செய்வது தொடர்பான சம்மனை நேரில் அளித்துவிட்டு, அதற்கான பதில் அறிக்கையை  திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிக்குள் தெரிவிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : Cunha ,Nithyananda , Nityananda, Exclusion, Justice Cunha, Surprise
× RELATED 14 பசுக்கள், 12 எருமைகளுடன் ஒன்றிய...