×

ஆவடி மத்திய கனரக தொழிற்சாலையில் விபரீதம்: சிஆர்பிஃ வீரரால் சக ஊழியர் சுட்டு கொலை... போலீசார் விசாரணை

சென்னை: சென்னை ஆவடி மத்திய கனரக தொழிற்சாலையில் சிஆர்பிஃ வீரர் ஒருவர் தன்னுடைய சக வீரரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த ஆவடியில் கனரக வாகன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ராணுவத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் , டேங்க் உள்ளிடவை தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த தொழிற்சாலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பணிமாற்றம் செய்ய வந்த போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத்தொழிற்சாலையில் இன்று காலை கிரிஜேஷ்குமார் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

அச்சமயம், இடையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்நேரம் அங்கு பணிமாற்றம் செய்ய வந்த சின்ஹா என்பவர், கிரிஜேஷ்குமார் ஓய்வு எடுத்து கொண்டிருப்பதை கண்டு கோவமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த நீலம்சின்ஹா என்ற ஊழியர், தனது சக ஊழியரான கிரிஜேஷ்குமார் என்பரை நோக்கி துப்பக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் கிரிஜேஷ்குமார் மீது 6 குண்டுகள் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிரிழந்த கிரிஜேஷ்குமார் இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நீலம்சின்ஹாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு சக ஊழியர்களிடையே நடந்த மோதலில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : soldier ,CRPF ,police officer ,Awadhi Central Heavy Factory , Awadhi, heavy factory, CRPF, employee, shot dead
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை