×

குழந்தைகள் ஆபாச படம் பகிர்ந்த உ.பி. வாலிபர் கைது: கரூரில் போலீசார் அதிரடி

கரூர்: குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்த உபி வாலிபரை கரூர் போலீசார் கைது செய்தனர். குழந்தைகளின் ஆபாசபடங்களை பார்ப்பதும், அவற்றை பதிவிறக்கம் செய்வதும், பிறருடன் பகிர்ந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 12ம் தேதி திருச்சி பாலக்கரையை சேர்ந்த ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (42) என்பவர் தமிழ்நாட்டில் முதன் முதலாக கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கரூரில் வடமாநில வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர் நியாஸ்அலி (23). கரூர் கோவை ரோட்டில் உள்ள ஒரு சலூன் கடையில் வேலை செய்து வந்தார்.

இவர், குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து வருவதாக சென்னையில் உள்ள குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தேசிய மையத்திற்கு தகவல் கிடைத்தது. இதை கண்காணித்து உறுதி செய்த சென்னை அதிகாரிகள் கரூர் எஸ்.பி. பாண்டியராஜனுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கரூர் டவுன் போலீசார் அந்த சலூன் கடைக்கு சென்று நியாஸ்அலியின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். கடந்த ஆண்டு மே 5ம் தேதி முதல் நேற்றுமுன்தினம் மாலை வரை குழந்தைகளின் ஆபாச படத்தை பார்த்தும், பகிர்ந்தும் வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், டவுன் காவல் நிலையம் அழைத்து வந்து விடிய விடிய விசாரணை நடத்தினர். நேற்று அவர், கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Karur UP ,Karur , Kids, porn movie, UP Plaintiff, Arrest, Karur, Police, Action
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்