×

போர்வெல்கள் வறண்டதால் தட்டுப்பாடு: தண்ணீரை தேடி வீதி வீதியாக அலையும் மக்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது  காப்பாரப்பட்டி கிராமம். இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக காப்பாரப்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வீடுகள் மற்றும் வீதிகளில் உள்ள பொது குழாய்களுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முன்பு வரிசையாக குழாய் அமைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

போர்வெல்கள் வறண்டால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால்  இக்கிராம மக்கள் கோட்டை வேங்கைபட்டிக்கு  இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். கோட்டை வேங்கைபட்டி மக்கள் தண்ணீர் தர மறுக்கின்றனர். இதனால் இக்கிராம மக்கள் தண்ணீர் தேடி வீதிவீதியாக அலையும் நிலை உள்ளது. தனியார் அமைக்கும் போர்களில் தண்ணீர் இருக்கும் போது, அரசு அமைக்கும் போர்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போதுவது ஏனோ என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘இந்த கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் குடிக்கவும், சாப்பிட்ட தட்டைக் கூட கழுவ முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் சம்பளத்திற்கு ஆள் பிடித்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்றனர். கிராம மக்கள் கூறுகையில், ‘தண்ணீர் கேட்டு பலமுறை ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தோம். இதுவரை நடவடிக்கை இல்லை. எங்கள் பகுதிக்கு தண்ணீர் கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேண்டும்’ என்றனர்.

Tags : Borewells Dry Borewell , Borewell, water, people
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...