×

என் மீது 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தஞ்சாவூர்: என் மீது இரண்டு வழக்குகள் அல்ல, 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் முக ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் விழிப்புடன் இருந்ததால்தான் இந்த அளவுக்கு வெற்றி பெற்றோம். இந்த தேர்தல் வெற்றியை முறையாக அறிவித்திருந்தால் தி.மு.க. கிட்டத்தட்ட 90 சதவீதம் வெற்றி பெற்றிருக்கும். இதற்காகத்தான் நங்கள் நீதிமன்றங்களை  நாடினோம், இல்லாவிட்டால் இந்த வெற்றி கூட கிடைத்திருக்காது.

இந்த வெற்றி அடுத்து வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. என் மீது இரு நாட்களுக்கு முன்பு இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. என் மீது இரண்டு வழக்குகள் அல்ல, 2 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நீட் தேர்வை தடுக்கும் ஆற்றல் இந்த அரசுக்கு இல்லை.

இதேபோல எந்தக் காலத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ் நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என சட்டப் பேரவையில் ஆளுங்கட்சியினர் அறிவித்தனர். ஆனால் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதை இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது. இந்த நிலையில்தான் நாடு போய்க்கொண்டிருக்கிறது. இதை மக்கள் உணர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Tags : MK Stalin , 2 Thousand Cases, Ready, Dmk leader MK Stalin, Speech
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...