வேலூர்: தூர்வாரப்பட்ட வேலூர் கோட்டை அகழியில் மிதக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையில் ₹33 கோடியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கோட்டை வளாகத்தில் 2.5 கி.மீ தூரத்துக்கு நடைபாதை, பூங்கா, குடிநீர் வசதி, தகவல் பலகைகள், கேன்டீன் வசதி ஆகிய பணிகளுடன், பழமையான கட்டிடங்களை இடியும் நிலையில் உள்ளதை தவிர்த்து பிற கட்டிடங்களை அதன் வரலாற்று தகவல்களுடன் புனரமைப்பது என பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் சுமார் 3 கி.மீ சுற்றளவுள்ள அகழி முழுவதுமாக தூர்வாரப்பட்டுள்ளது. தற்போது கோட்டையை சுற்றிலும் அகழியில் நீர்நிரம்பி எழிலுடன் காட்சி அளிக்கிறது. இவ்வாறு தூர்வாரப்பட்ட அகழியின் கரைகளில் உள்ள முட்புதர்களும், புல்பூண்டுகளும், செடிகொடிகளும், குப்பைகளும், கழிவு பொருட்களும் அகற்றி சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அகழியில் காற்றில் பறந்து வரும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து வருகிறது. இவ்வாறு அகழியில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றும் நடவடிக்கையை மாநகராட்சியும், தொல்லியல்துறையும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் கோட்டை அகழியின் எழிலை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று வேலூர் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.