சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தேர்தல் நடத்துவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தலைவர் தேர்தலில் பங்கேற்க திமுக உறுப்பினர்கள் வந்திருக்க கூடிய நிலையில், அதிமுக உறுப்பினர்கள் வராததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் மொத்தம் 16 பேர் உள்ள நிலையில், திமுக, அதிமுக கூட்டணி சமபலமாக தலா 8 உறுப்பினர்களை வைத்துள்ளதால் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டு வந்தது. தமிழகம் முழுவதும் 26 இடங்களில் மாவட்ட ஊராட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் சிவகங்கையில் மட்டும் ஆளும், எதிர்க்கட்சி சமபலத்துடன் இருந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் வார்டு உறுப்பினர்களில் திமுக தரப்பில் 8 பேர் கடந்த முறை தேர்தல் நடைபெறவுள்ள அரங்கிற்கு வருகை தந்தனர். அதிமுக உறுப்பினர்கள் யாரும் ஆஜராகவில்லை. மேலும் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி இன்று தேர்தல் நடத்த ஆயத்தமானது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சரியாக 10.30 மணியளவில் தலைவர் தேர்தலில் பங்கேற்க திமுக உறுப்பினர்கள் 8 பேர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து காத்துள்ளனர். தொடர்ந்து, நீண்ட நேரமாகியும் தேர்தலில் பங்கேற்க அதிமுக உறுப்பினர்கள் வருகை தரவில்லை. ஆதலால் இன்று சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தேர்தல் நடத்துவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.