ஆவடி: அம்பத்தூர் அடுத்த ஒரகடம், செல்வவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் திலீப்குமார் (34). வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் முகவர் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் மர்ம கும்பல் திலீப்குமாரை கடத்தி சென்றது. புகாரின்பேரில் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து திலிப்குமார் செல்போன் டவரை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர்கள் திலிப்குமாரை புதுச்சேரிக்கு கடத்தியது தெரிந்தது.. எனவே போலீசார், புதுச்சேரிக்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்த மர்ம கும்பல் அவரை முத்தியால்பேட்டை காவல் நிலையம் அருகே விட்டுவிட்டு தப்பி சென்றனர். இதனை அறிந்த போலீசார் திலீப்குமாரை மீட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு அம்பத்தூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
விசாரணையில் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்ப 8 லட்சம் வாங்கி விட்டு ஆட்களை அனுப்பாததால் பாதிக்கப்பட்ட 5 பேர் கும்பல் கடத்தியது தெரிந்தது. எனவே போலீசார் புதுச்சேரி, முத்தியால்பேட்டை, வாழைகுளம் பகுதியை சரவணன் (32), தமிழ்சந்திரன் (24), நரேஷ்குமார் (22) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர். மேலும் சுரேஷ், ஷேக் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.