செங்கல்பட்டு: பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக செங்கல்பட்டு மாவட்டம் விளங்காடு ஊராட்சியை சேர்ந்த மாரியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மாரி என்பவரின் பெயரில் இதுவரை அரசு தொகுப்பு வீடு மற்றும் ஆணை எதுவும் பிறப்பிக்காத நிலையில் மணிமாரி என்ற பெயரில் வீடு கட்டியதாகவும், அதற்கான அனைத்து தொகைகளும் வங்கியில் பரிமாற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும், அந்த தொகையில்தான் வீடு கட்டியதாகவும், அரசு ஆவணத்தில் பதியப்பட்டதை கண்டு மாரி அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி மாரி தனது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, இதே ஊராட்சிக்குட்பட்ட கோட்ட கயப்பாக்கம் கிராமத்தில் முருகன் என்பவரின் பெயரிலும் வீடு கட்டியதாக மோசடி புகார் கூறப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் இருளர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில், அனைத்து வீடுகளும் முறையாக கட்டி முடிக்காமலும், அதிலும் சில வீடுகள் கட்டாமலேயே கட்டியதாக முறைகேடு நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த முறைகேடுகள் குறித்து தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் உரிய விசாரணை மேற்கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.