பாட்னா: என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை நடைமுறைப்படுத்த பீகார் மற்றும் ஒடிசா அரசுகள் திடீர் நிபந்தனைகளை விடுத்துள்ளனர். தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது என்.ஆர்.சி எனப்படும் தேசிய மக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்கான முன் திட்டம் என கூறி, காங்கிரசு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மாநிலங்களின் வரிசையில் தற்போது பீகாரும், ஒடிசாவும் இணைந்துள்ளனர். என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த போவதில்லை என பீகார் முதலமைச்சர் நித்தீஷ் குமார் ஏற்கனவே அறிவித்து விட்டார். ஆனால் என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த வேண்டுமானால் பெற்றோர் பிறந்த இடம், பிறந்த தேதி ஆகிய கேள்விகள் நீக்கப்பட வேண்டுமென்று அவர் நிபந்தனை விடுத்துள்ளார்.
இந்த கேள்விகள் கேட்க படுவதற்கான அவசியம் என்ன? என்றும் நித்தீஷ் குமார் கேள்வியெழுப்பியுள்ளார். இந்த கேள்விகள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்று நித்தீஷ் குமார் கருத்து தெரிவித்தார். கேள்வி பட்டியலில் வெற்றிடம் விடப்பட்டுள்ளதும், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒடிசா மாநிலத்தில் அமல்படுத்தப்பட உள்ள என்.பி.ஆரில் இந்த கேள்விகள் அடங்கிய பத்தி நீக்கப்படும் என்று முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.