×

தலைநகராக அமராவதி தொடர கிருஷ்ணா நதியில் இறங்கி விவசாயிகள், பெண்கள் தர்ணா

திருமலை: ஆந்திர தலைநகராக அமராவதி தொடர வலியுறுத்தி கிருஷ்ணா நதியில் இறங்கி விவசாயிகள், பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர தலைநகராக அமராவதி தொடர வேண்டும் என வலியுறுத்தி 42வது நாளாக தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழுவினர் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், நேற்று துள்ளூர், எர்ரபாளையம், வெலகம்புடி, மந்தனம், நவ்வலுறு கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ராயப்புடியில் கிருஷ்ணா நதியில் இறங்கி பெண்கள் மற்றும் விவசாயிகள் அமராவதி தலைநகரை பாதுகாப்போம் என்று வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பல இடங்களில் அமராவதி தலைநகருக்கு ஆதரவாக பைக் பேரணி மேற்கொண்டனர். ஆனால் அரசு அமராவதியை காட்டிலும் மாநிலம் முழுவதும் சம வளர்ச்சி அடைய வேண்டும் என மூன்று தலைநகர் அமைக்க முடிவு செய்து  அமைச்சரவையிலும், சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமராவதிக்கு உட்பட்ட கிராமங்களில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Tags : Amaravati ,women ,river ,Krishna , Capital Amravati, Krishna River, Farmers, Women Darna
× RELATED கரூர் ஆண்டாங்கோவில் ராஜ வாய்க்காலை தூர்வார வேண்டும்