கூடலூர்: பேபி அணையை பலப்படுத்திய பிறகு பெரியாறு அணையில் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் என, கண்காணிப்பு குழு தலைவர் குல்சன்ராஜ் தெரிவித்தார். பெரியாறு அணை கண்காணிப்பு குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய, அணை பாதுகாப்பு அமைப்பின் முதன்மை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். தமிழக அரசு பிரதிநிதியாக தமிழக பொதுப்பணித்துறை கூடுதல் அரசு முதன்மை செயலர் மணிவாசன், கேரள பிரதிநிதியாக கேரள நீர்வளத்துறை செயலர் அசோக் ஆகியோர் உள்ளனர். இக்குழுவினர் பெரியாறு அணையில் நேற்று ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து நேற்று மாலை குமுளியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்பு நிருபர்களிடம் தலைவர் குல்சன்ராஜ் கூறியதாவது: பேபி அணையை பலப்படுத்திய பிறகு பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும். இதற்காக பேபி அணையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வல்லக்கடவு பாதை மோசமாக உள்ளது. அதனை புதுப்பிக்க மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பேபி அணையை பலப்படுத்த அங்குள்ள மரங்களை வெட்ட வேண்டியுள்ளது. இதற்காக கேரள வனத்துறையின் அனுமதியை தமிழக அரசு கோரியுள்ளது. அனுமதி கிடைக்கவில்லை. எனவே இருமாநில அரசுகளும் கலந்து பேசி இப்பிரச்னையை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.