புதுடெல்லி: பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகியின் லாபம் டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது ரூ.1,565 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2019ம் நிதியாண்டில் டிசம்பருடன் முடிந்த காலாண்டில் இந்த லாபம் அதிகரித்துள்ளது. செலவினங்கள் குறைப்பு, பொருள்களின் குறைந்த விலை, பயன்பாடு திறன் மேம்பாடு உள்பட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நிறுவனத்தின் லாபம் உயர்ந்துள்ளது என்று மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வாகனங்கள் விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைக்கு கூடுதல் செலவு, வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு போன்றவையால் முதலீடின் மீதான லாபம் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடன் நெருக்கடி, இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகரிப்பு, நவீன தொழில்நுட்பம் ஆகியவவை காரணமாக ஆட்டோமொபைல் தொழில் கடும் நெருக்கடியை சந்தித்தது. இதனால் வாகனங்கள் விற்பனை சரிந்து, தொழிற்சாலைகளில் வேலையிழப்பு ஏற்பட்டது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த 2019ல் வாகனம் விற்பனை மூலம் ரூ.19,649.1 கோடி வருவாய் கிடைத்தது. அதற்கு முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.18,926.4 கோடியாக இருந்தது.
இந்த நிறுவனம் கடந்த அக்டோபர் - டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் மொத்தம் 4,37,361 வாகனங்களை விற்றுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் விற்றதைவிட 2 சதவீதம் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டில் 4,13,698 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில் 23,663 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் கடந்த 9 மாதங்களில் மாருதி சுசூகி நிறுவனம் மொத்தம் 11,78,272 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் விற்பனை செய்ததைவிட இது, 16.1 சதவீதம் குறைவு. இதேபோல் உள்நாட்டில் விற்பனையும் 16.9 சதவீதம் சரிவை சந்தித்தது. உள்நாடில் விற்பனை மற்றும் ஏற்றுமதி போன்றவற்றால் ஓரளவு தொழில் பாதிக்கவில்லை. பொருளாதார மந்தநிலை காரணமாக ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் தொழிலுக்கு நெருக்கடி ஏற்பட்டதால் மாருதி சுசூகி நிறுவனத்திலும் அது எதிரொலித்தது.