×

நீர்மட்டம் 3 டிஎம்சியை எட்டியதால் பூண்டியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்

சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்நிலைகளில் புழல் ஏரி குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கோடை காலத்தில் நிலவிய தண்ணீர் தட்டுப்பாடு தலைநகர் சென்னையை கடுமையாக பாதித்தது. பொதுமக்கள் காலி குடங்களுடன் தெருத்தெருவாக அலையும் நிலை ஏற்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல தனியார் நிறுவனங்கள் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விடுமுறை அறிவித்தன. ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற கேட்டுக்கொண்டன. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க புறநகர் பகுதிகளில் உள்ள கல் குவாரிகள், விவசாய கிணறு மற்றும் ஏரிகளில் இருந்து பைப்லைன் மூலம் தண்ணீர் சென்னைக்கு ெகாண்டு வரப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு பருவமழை இயல்பைவிட சற்று அதிகமாக பெய்ததால் தமிழ்நாட்டில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பின.

சென்னைக்கான மழை அளவு இயல்பு அளவைவிட சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் ஆந்திராவில் பெய்த தொடர் மழை காரணமாக கண்டலேறு அணையில் 40 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் நிரம்பியது. இதையடுத்து, கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி தமிழகத்துக்கான தண்ணீரை ஆந்திர அரசு கொடுத்து வருகிறது. தற்போது  முதல் தவணை காலம் தொடங்கியுள்ள நிலையில், கிருஷ்ணா கால்வாயில் 304 கனஅடி வீதம் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்றைய நிலவரப்படி 3,231 மில்லியன் கன அடி கொள்ளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம் 1507 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.

இந்த  ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படுவது வழக்கம். அதன்படி, புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய்  மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது, 2,938 மில்லியன் கன அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதாவது 3 டிஎம்சியை எட்டியுள்ளதால், பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு  திறக்கப்பட்டு வந்த 358 கன அடி நீர் முற்றிலும் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னையின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரியிலிருந்து விநாடிக்கு 69 கன அடி நீர் திறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Pullam Lake ,Pondi , Water level, 3dmc, boondi, puddle lake, water, opening, parking
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல்,...