×

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஐஏஎஸ் அதிகாரியை பழிவாங்குகிறார் முதல்வர் பழனிசாமி: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக ஊழல் தடுப்புத்துறை விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தொடர் முறைகேட்டுக்கு ஒத்துழைக்க மறுத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு திடீரென மாற்றப்பட்டு உள்ளார். குறிப்பிட்ட திட்டத்தின் டெண்டர் ஐஏஎஸ் அதிகாரி மாற்றம் பற்றி கோப்புகளை கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஐஏஎஸ் அதிகாரியை மாற்றி, முதல்வர் பழனிசாமி பழிவாங்குவதைக் கண்டிக்கிறேன்.

ரூ.2,441 கோடி அலைக்கற்றை உட்கட்டமைப்பு திட்டத்தின் டெண்டர் முறைகேடு பற்றி செய்திகள் வெளியாகி உள்ளன. முதலமைச்சரோ, தொழில்நுட்பத்துறை அமைச்சரோ எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. அரசு நிர்வாகத்தை அடியோடு சீர்குலைத்துத் தரைமட்டமாக்க தலைமை செயலாளர் எடப்பாடி அனுமதிக்கிறார்?. நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளை முதல்வரும், அமைச்சர்களும், பந்தாடுவதற்கு தலைமை செயலாளர் எப்படி இடமளிக்கிறார்?. அதிகாரி மாற்றம் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் முணுமுணுப்பே காட்டாமல் முடங்கிப் போனது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

பாரத் நெட், தமிழ் நெட் திட்டம் அதிமுக அரசின் கீழ் உருப்படியாக நடைபெறுமா என்ற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவும் இத்திட்டத்தை அதிமுக அரசு ஊழல் மயமாக்கிவிடும் என்பதற்கு ஆதாரம் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம். பாரத் நெட் திட்டம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணையாவது செய்திட முன்வர வேண்டும். ஊழல் நடப்பதற்கு முன்பே தடுப்பது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை மற்றும் விழிப்புணர்வு ஆணையத்தின் கடமை என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Palanisamy ,MLA ,misuse ,Stalin ,CM Palanisamy , IAS Officer, Chief Palanisamy, MK Stalin
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...