×

சென்னை அம்பத்தூரில் இளைஞர் கடத்தல்: சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னை:  சென்னை அம்பத்தூரில் இளைஞர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார். இவர் கடந்த 5 ஆண்டுகாலமாக அயல்நாட்டில் வேலை வாங்கி தரும் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார்.  தற்போது இவர், வேலை வாங்கி தருவதாக கூறி பல இளையஞர்களை  ஏமாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் திலீப்குமாரால் ஏமாற்றப்பட்ட 5 மர்ம நபர்கள் இன்று காலை பட்டப்பகலிலேயே அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரிடம் பேசுவது போன்று பாவனை செய்து, பின்னர் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அவர் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டறிய 2 தனிப்படைகள் அமைத்து தேடிவருகின்றனர். மேலும் திலீப்குமாரை போல ஏஜெண்டாக மற்றொரு நபரும் செயல்பட்டு வருவதாக அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது. ஆதலால் கடத்தப்பட்ட திலீப்குமார் விரைவில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே, அயல்நாட்டில் வேலைவாங்கி தருவதாக ஏமாற்றும் மோசடி கும்பல் சிக்கும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை அம்பத்தூரில் இளைஞனை பட்டப்பகலில் கடத்தி செல்லும் இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Chennai ,Ambattur ,CCTV , Chennai, Ambattur, Youth, Abduction, CCTV footage
× RELATED புழல் பகுதியில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்: போக்குவரத்து நெரிசல்