×

அமைச்சர் வேலுமணியை விமர்சிப்பதற்காக திமுகவினர் கைது செய்யப்பட்டால் நானே மக்களை திரட்டி போராடுவேன்: ‘அதிகாரம்’ என்ற ‘ஆணவம்’ ஏறிக் கூடுகட்டிக் கொண்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியை எதிர்த்து விமர்சிப்பதற்காக, இனிமேலும் திமுகவினர் கைது செய்யப்பட்டால் நானே கோவைக்கு வந்து மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று திமுக தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவை மாவட்டத்தில் உள்ள அரசூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற முதல் கிராமசபைக் கூட்டத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றிப் பேசியதற்காக, திமுக முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் ஏ.வி.முத்துலிங்கத்தை கைது செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிராமசபை என்பது மக்களின் சுதந்திரமான கருத்துகளை, எண்ணங்களை உள்ளது உள்ளபடிப் பிரதிபலிக்கும் மிக முக்கியமான கருத்துக் கேட்கும் கூட்டம். அந்தக் கூட்டத்தில் ஒரு முன்னாள் கவுன்சிலர் என்ற முறையில் உரிமையுடன் ஒரு கருத்தைக் கூறும் போது, அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து - அதன் மீது நடவடிக்கை எடுத்து, தீர்வு காண்பதுதான் உள்ளாட்சித் துறை அமைச்சரின் பணி. ஆனால் இங்கே உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் தலையில் “அதிகாரம்”என்ற “ஆணவம்” ஏறிக் கூடு கட்டிக் கொண்டிருப்பதால், அவரை எதிர்த்துப் போராடினாலோ, குறை சொன்னாலோ, கைது என்ற அடக்குமுறையை ஏவி விடுவது மிகவும் வெட்கக்கேடானது.

கோவையிலும், தமிழகத்தின் வேறு பகுதிகளிலும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு எதிராக, ஏதேனும் உண்மைச் செய்தியை வெளியிட்டால் பத்திரிகையாளரை கைது செய்வது, வழக்குப் போட்டால் குண்டர் சட்டத்தில் அடைப்பது, எதிர்த்துப் பேசும் திமுகவினரைச் சிறைப் பிடிப்பது என அராஜகமான நடவடிக்கைகளிலும் சில காவல்துறை அதிகாரிகள் ‘பேயாட்டம்’ போடுகிறார்கள். அதிலும் குறிப்பாக, கோவைப் பகுதியில் உள்ள காவல்துறையினர், உள்ளாட்சித் துறை அமைச்சரின் “தனியார் செக்யூரிட்டி அதிகாரிகள்”போல் செயல்படுகிறார்கள் என்பது தமிழக காவல்துறைக்கே தலைகுனிவாக அமைந்திருக்கிறது.

போலீஸ் துறையின் அறிவிக்கப்படாத துறை அமைச்சராக, தன் கட்டளை கேட்டு நடப்பவர்களை தேர்ந்தெடுத்து மாவட்டத்திற்கு மாறுதல் அனுமதி கொடுப்பவராக, வேலுமணி செயல்படுகிறாரா என்ற சந்தேகம் நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கும், கோவை மக்களுக்கும் எழுந்துள்ளது. அமைச்சர் பதவிக்கு எஞ்சியிருக்கும் காலம் இன்னும் பதினெட்டு மாதங்கள்தான். அதன் பிறகு அமைச்சர் வேலுமணிக்காக இப்போது பொய் வழக்குப் போடும் காவல்துறை அதிகாரிகளும், அவருடைய  தூண்டுதலின் பேரில் வரும் புகார்கள் மீது எல்லாம் திமுகவினரைக் கைது செய்து துன்புறுத்தும் காவல்துறை அதிகாரிகளும், நிச்சயம் சட்டப்படியான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது.

‘சட்டத்தின் ஆட்சியை’ அமைச்சரின் ஆணைக்கேற்ற ‘சர்வாதிகார ஆட்சியாக’ மாற்றும் அநியாயத்திற்கு, காவல்துறை கிஞ்சித்தும் துணை போகக்கூடாது. அப்படித் துணை போய், ஒழுக்கக் கேடு தாராளமாக உள்ளே நுழைந்து விடாமல், தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு காவல்துறை தலைவர் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உள்ளாட்சித் துறை அமைச்சரை எதிர்த்து விமர்சிப்பதற்காக, போராடுவதற்காக இனிமேலும் திமுகவினர் கைது செய்யப்பட்டால் - நானே கோவைக்கு வந்து - மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Velumani ,DMK ,MK Stalin , Minister Velumani, DMK, Arrested, Struggle, Time to Speak
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...