ஈரோடு: கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடகா மாநிலம் தேவனகந்தி வரை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் விளைநிலங்களில் குழாய்கள் பதித்து பெட்ரோல், டீசல் போன்றவை கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக குழாய்கள் பதிப்பதற்காக விரைவில் விளைநிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் நேற்று முன்தினம் குடியரசு தினத்தையொட்டி ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடந்த கிராமசபை கூட்டங்க ளில் 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து பாரத் பெட்ரோலியம் குழாய் பதிப்பு திட்ட பாதிப்பு விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் கூறியதாவது: ஐ.டி.பி.எல், திட்டத்தால் பாதிக்கப்படும் கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், பொது அமைப்புகளின் கருத்துகள் ஏற்கப்பட்டது. எண்ணெய் குழாய்களை சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று திருப்பூர் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.