சென்னை: மெட்ரோ ரயில் வாகன சேவை மூலம் 7.18 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2018ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சி சேவையை அறிமுகப்படுத்தியது. இந்தநிலையில், கடந்த 2019 டிசம்பர் மாத்தில் 4,578 பேர் ஷேர் டாக்சி சேவையையும், 37,788 பேர் ஷேர் ஆட்டோ சேவையையும் என மொத்தமாக 42,366 பேர் பயன்படுத்தியுள்ளனர். இதேபோல், வாகன இணைப்பு சேவையை 25,597 பேர் பயன்படுத்தியுள்ளனர். மொத்தமாக கடந்த டிசம்பர் மாதத்தில் 67,963 பேர் மூன்று சேவையையும் பயன்படுத்தியுள்ளனர். கடந்த 2018 ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 31 டிசம்பர் 2019 வரை சுமார் 7,18,003 பேர் வாகன சேவையால் பயனடைந்துள்ளனர்.
ஷேர் ஆட்டோ சேவையை அதிகமாக பயன்படுத்துவதில் கிண்டி நிலையம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு, டிசம்பர் மாதம் 11,803 பேர் சேவையை பயன்படுத்தியுள்ளனர். இதேபோல், வாகன இணைப்பு சேவையை அதிகபட்சமாக விமான நிலையத்தில் 12,430 பேரும், குறைந்தபட்சமாக அரும்பாக்கத்தில் 174 பேரும் சேவையை பயன்படுத்தியுள்ளனர். மேலும், மீதம் உள்ள 16 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகன இணைப்பு சேவையை செயல்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.