சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்தில், மெட்ரோ ரயில் நிலையம் அருகே பிரபல தனியார் உணவகம் உள்ளது. நேற்று காலை இந்த உணவகத்தை ஊழியர்கள் திறக்க வந்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 1.3 லட்சம், கம்ப்யூட்டர் போன்றவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தகவலறிந்து வந்த விமான நிலைய போலீசார், உணவகத்தில் உள்ள சிசிடிவி கேராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, மங்கி குல்லா, கருப்பு முகமூடி, கருப்புகோர்ட் போட்டபடி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு தாழ்வாக செல்லும் பகுதியில் நுழைந்த ஆசாமிகள் விலை உயர்ந்த இனிப்புகளை எடுத்து சாப்பிடுவதும் கம்ப்யூட்டர், இனிப்பு பார்சல்களை எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இப்பகுதியில், பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களது நடமாட்டம் 24 மணி நேரமும் இருக்கும். மேலும், விமான நிலையம் ரெட் அலர்ட் என உச்சக்கட்ட பாதுகாப்பில் இருக்கும்போது, நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.