உடுமலை, நூறு சதவீத வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. வாக்காளர் பெயர் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதியோர் பலர் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.இந்நிலையில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி (ஜன. 25), மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி தேர்தல் ஆணையம் சார்பில் நடந்தது.
அதன்படி, பெரியவாளவாடி கிராமத்தை சேர்ந்த மாராத்தாள் (100) என்பவரை, தேர்தல் துணை வட்டாட்சியர் சுப்பிரமணி, வருவாய் அதிகாரி ஹேமா ராணி, மடத்துக்குளம் வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினர்.இதேபோன்று, சாலையூர் கிராமத்தில் காளியம்மாள்(105) என்பவரையும் அதிகாரிகள் சந்தித்து கவுரவப்படுத்தினர்.