புதுடெல்லி: டெல்லியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கலந்து கொண்டார். பி்ன்னர், அவர் அளித்த பேட்டி: விளையாட்டு துறையில் 1500 பயிற்சியாளர்கள் இடம் காலியாக உள்ளது. பல்வேறு காரணங்களால் இதுவரை அவை நிரப்பப்படாமல் இருந்தது. வரும் நாட்களில் இவற்றை நிரப்ப முடிவு செய்துள்ளோம். புகழ் பெற்ற வெளிநாட்டு பயிற்சியா–்ளர்களை அவர்களின் ஊதியத்தை பொருட்படுத்தாமல் பணியமர்த்துவோம். இந்திய விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு நிதி பற்றாக்குறை இருக்காது. அவர்களுக்கு தரமான உணவு கிடைப்பது உறுதி செய்யப்படும்.
ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன் பட்டங்களை வெல்வதில் ஆண்களை காட்டிலும் பெண் விளையாட்டு வீரர்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ஆண் விளையாட்டு வீரர்களை காட்டிலும் பெண் விளையாட்டு வீரர்கள் தான் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர். பெண்களை ஊக்கப்படுத்தியிருக்கா விட்டால் நமது 60 சதவீத பதக்கங்கள் காணாமல் போயிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.