×

தங்கக் கட்டிக்கு ஆசைப்பட்டு 40 லட்சத்தை இழந்த நகைக்கடை அதிபர்: ராயப்பேட்டையில் துணிகரம்,.. 2 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் நகைக்கடை அதிபர் பிரவீன்குமார் (40). இவர், ேநற்று முன்தினம் இரவு ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், ராயப்பேட்டை பகுதியில் நிலம் வாங்கி வருவதாக என்னை அழைத்து இரண்டு பேர் கத்திமுனையில் மிரட்டி 40 லட்சத்தை பறித்து சென்றுவிட்டனர் என குறிப்பிட்டிருந்தார்.  அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நகைக்கடை உரிமையாளர் பிரவீன்குமார் நிலம் வாங்க வரவில்லை என்றும், கள்ளச்சந்தையில் தங்கக்கட்டி வாங்க வந்த போது 40 லட்சம் பணத்தை பறிகொடுத்ததும் தெரியவந்தது. தங்கக்கட்டி வாங்கி தருவதாக அழைத்து வந்த பிரபாகரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 40 லட்சத்துடன் தலைமறைவான முகமது மற்றும் அகமதுவை போலீசார் தனிப்படையினர் தேடுகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: அமைந்தகரையில் பிரவீன் குமார் தங்க நகை விற்பனை செய்து வருகிறார். கடந்த வாரம் பிரவீன்குமாரை பிரபாகரன் என்பவர் அணுகி, வெளிநாட்டில் இருந்து தங்க கட்டிகள் வந்துள்ளன. போலீசாரின் கெடுபிடியால் அதை குறைந்த விலைக்கு விற்க அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்று கூறி உள்ளார். இதை வாங்க பிரவீன் குமார் ஒப்புக்கொண்டார். அதன்படி நேற்று முன்தினம் இரவு இடைத்தரகர் பிரபாகரனுடன் நகைக்கடை அதிபர் பிரவீன்குமார் ₹40 லட்சம் பணத்துடன், ராயப்ேபட்டை சிவசைலம் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு, தங்கம் வைத்துள்ளதாக கூறிய முகமது மற்றும் அவரது நண்பர் அகமது ஆகியோர் நகைக்கடை அதிபர் பிரவீன்குமாரை வரவேற்றனர்.

பின்னர் சொன்னப்படி 40 லட்சம் பணத்தை கொடுத்தால் தங்கக்கட்டிகள் தருவதாக கூறினார். அதன்படி பிரவீன்குமார் 40 லட்சத்தை கொடுத்தார். பணத்தை வாங்கிய முகமது மற்றம் அகமது ஆகியோர், சொன்னப்படி தங்கக்கட்டி கொடுக்காமல் பிறகு தருவதாக கூறியுள்ளனர். இதனால் பிரவீன்குமாருக்கும் பணத்தை வாங்கிய நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பிரவீன்குமார் கழுத்தில் கத்தியை ைவத்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம். கள்ளச்சந்தையில் தங்கக்கட்டி வாங்க முயன்றதாக உன்னை தான் போலீசார் கைது செய்வார்கள் என்று மிரட்டி பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர்.

கள்ளச்சந்தையில் தங்கக்கட்டி வாங்க வந்த போது 40 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளித்தால் தாமும் போலீசாரிடம் சிக்கிவிடுவோம் என்பதால் நிலம் வாங்க வந்த போது பணத்தை கொள்ளையடித்ததாக புகார் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது. எனவே, இந்த வழக்கில் நகைக்கடை அதிபர் பிரவீன்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags : jeweler ,temptation nugget jeweler ,President ,Royapettah , Gold tie, jeweler's chancellor, Royapettah
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!