ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த புதனன்று என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த முக்கியமான தீவிரவாதி என தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த புதன்று தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து போலீசார், ராஷ்டிரிய ரைபிள் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் உள்ளிட்டோர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த வீரர்களை மீட்கும்போது அங்கிருந்த தீவிரவாதிகள் தப்பி சென்றனர்.
இதனை தொடர்ந்து நாகந்தர் கிராமத்தில் வீரர்கள் மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் யார் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவன் பெயர் அபு சபிபுல்லா. இவன் பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன். கடந்த 2013ம் ஆண்டு குப்வாராவில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைமை தளபதி பாகிஸ்தானின் குவாரி யாசீருக்கு மிக நெருக்கமானவன். இவன் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையதால் போலீசார் இவனை தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.