ராமேஸ்வரம்: நமது பழமையான கலாச்சாரத்தில் பல விதமான சடங்குகள், நமக்கு நன்மையான பலன்களை அளிக்க வேண்டும் என்கிற உயர்ந்த காரணத்திற்காக ஏற்படுத்தப்பட்டவை ஆகும். அதில் ஒன்று ஒருவரின் பரம்பரையில் மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம், சிராத்தம் போன்றவற்றை தருவது ஆகும். இத்தகைய சடங்குகளை செய்வதற்குரிய ஒரு மிக சிறந்த நாள் “தை அமாவாசை” தினமாகும். இந்நிலையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறு, கடலில் பொதுமக்கள் புனித நீராடி வருகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 2.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை, தொடர்ந்து சுவாமி, அம்பாள் சன்னதியில் கால பூஜை நடைபெற்றது. தை அமாவாசை என்பதால் நாளை காலை 7 மணிக்கு ஸ்ரீராமர் பஞ்சமூர்த்திகளுடன் அக்னிதீர்த்த கடற்கரை மண்டகப்படிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி அருள்பாலித்தார். தீர்த்தவாரி உற்சவத்தை தொடர்ந்து அக்னிதீர்த்த கடலில் புனித நீராடும் பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராட அனுமதிக்கப்பட்ர்.
இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பொதுமக்கள் புனித நீராடி வருகின்றனர். திருவள்ளூர் கமலாலய திருக்குளத்தில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தீர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். உத்திரப்பிரதேசத்தில் புகழ்பெற்ற வாரணாசியில் மவுனி அமாவாசையை முன்னிட்டு கங்கை நதியில் ஏராளமானவர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தி வருகின்றனர்.