×

அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தாக்கல்: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: அமைச்சர் வேலுமணி மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு  புகார் மீது நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை, லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டர்களை தனக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது. இந்த புகார் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா  ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை அறிக்கையையும், 200 சாட்சிகளின் வாக்குமூலத்தையும் தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார். அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ஆரம்பகட்ட விசாரணை முழுமையான விசாரணை போல் நடத்தப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர். மேலும், எந்த விதிகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணை நடைமுறையின் படியும், லலிதா குமாரி, தெலங்கானா வங்கிபெட் சர்வேசுர ரெட்டி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களின்படியும் இந்த ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணையிலேயே ஒரு முழுமையான விசாரணைக்கு தேவையான சாட்சிகளை விசாரித்தல், ஆவணங்களை தடயவியல் துறைக்கு அனுப்பி உண்மை தன்மையை கண்டறிதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதனைப் பின்பற்றி 200 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை கையேட்டில் தமிழக அரசு  திருத்தங்கள் மேற்கொள்ள உள்ளது. இந்த வழக்கில் வழக்கு தொடர்ந்த மனுதாரரின் பின்புலம், அவரின் நோக்கம், உண்மையிலேயே இது பொது நல வழக்குக்கு உகந்ததா என்பன உள்ளிட்ட வாதங்களை முன்வைக்க அவகாசம் வேண்டும் என்றார். இந்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வக்கீல் சுரேஷ் ஆகியோர் சட்டரீதியான கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதற்கு லஞ்ச ஒழிப்பு துறை பதில் தர வேண்டும். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக அரசு சென்னை மாநகராட்சி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் பதில் வாதம் செய்வதற்காக விசாரணை பிப்ரவரி 17ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags : Velumani , Minister Velumani, Tender Scandal, Complaint, Inquiry Report, Filing, Icord, Inquiry
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...