×

திருவல்லிக்கேணியில் 3 அடுக்கு வீட்டில் தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் நாசம்

சென்னை: திருவல்லிக்கேணி அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி லால்பேகம் தெருவில் 3 மாடி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் 3வது தளத்தில் அஸ்லா ஹமது என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது விட்டின் ஒரு அறையில் பயன்படுத்தாத பழைய பொருட்களை வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை 3.45 மணி அளவில் அஸ்லா ஹமது வீட்டின் பழைய பொருட்கள் வைத்திருந்த அறையில் இருந்து கரும்புகை வந்தது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைவரையும் வெளியேறும்படி கத்தினர். சத்தம் கேட்டு குடியிருப்பில் உள்ள அனைவரும் வெளியே ஓடிவந்தனர். அதற்குள் 3வது மாடி முழுவதும் தீ மளமளவென பரவியது.

தகவலறிந்து எழும்பூர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் குடியிருப்பின் மற்ற தளங்களுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.  இந்த தீ விபத்தில் அஸ்லா ஹமது வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. மக்கள் நெரிசல் உள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் திருவல்லிக்கேணியில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Tiruvallikeni , Triplicane, fire
× RELATED பார்த்தசாரதி! அவன் பாதமே கதி!!