பெரம்பூர்: ஓட்டேரி, மங்களபுரம் கிருஷ்ணதாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அக்மல் என்கிற அஜ்மல் (35). மவுண்ட் ரோடு பகுதியில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு அஜ்மலுக்கு ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது அந்த ஆசாமி, ‘‘உனது 10 வயது மகள் மிஸ்பாவை கடத்த போகிறேன். நாளைக்குள் பத்து லட்சம் பணம் கொடு. இல்லாவிட்டால் உன் மகளை கடத்தி விடுவேன்’’ என கூறி விட்டு தொடர்பை துண்டித்து கொண்டார். புகாரின்பேரில் ஓட்டேரி காவல் நிலையபோலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி செல்போன் உரையாடல்களை பதிவு செய்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்த ஆசாமி யார்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.