×

வில்வித்தை சங்க தடை நீக்கம்: ஒலிம்பிக்கில் தேசிய கொடி

கொல்கத்தா: இந்திய வில்வித்தை சங்கத்தின் மீதான தடையை உலக வில்வித்தை கூட்டமைப்பு விலக்கி கொண்டுள்ளதால் இந்திய வீரர்கள் தேசிய கொடியுடன் ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம். தேர்தல் நடத்தாதது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக  இந்திய வில்வித்தை சங்கத்தின் மீது உலக வில்வித்தை கூட்டமைப்பு  2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடைக்கால தடை விதித்தது. அதனால் இந்திய வில்வித்தை வீரர்கள் சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பில் , இந்திய கொடியுடன் பங்கேற்க முடியவில்லை. நவம்பர் மாதம்  தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்த 21வது ஆசிய வில்வித்தை  சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கொடியுடன் நடுநிலை வீரர்களாக பங்கேற்றனர்.  

அந்த போட்டியில் வென்றதின்  மூலம் தீபிகா குமாரி உட்பட பலர்  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதிப் பெற்றனர். ஆனால் அவர்கள் ஒலிம்பிக் போட்டியிலும் நடுநிலை வீரர்களாக தான் பங்கேற்கமுடியும் என்ற நிலைமை இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் இந்திய வில்வித்தை சங்கத்துக்கு முறைப்படி தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனையடுத்து ‘இந்திய வில்வித்தை சங்கத்தின்’ மீதான தடையை விலக்கிக்கொள்வதாக உலக வில்வித்தை கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. அதனால் இந்திய வில்வித்தை வீரர், வீராங்கனைகள் இந்திய கொடியின் கீழ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.

Tags : Olympics , Archery, Olympic, National Flag
× RELATED குத்துச்சண்டை வீரர்களுக்கு துருக்கியில் பயிற்சி