×

எஸ்.எஸ்.ஐ கொலைக்கு பயன்படுத்தியது இஸ்ரேலிய தயாரிப்பு ராணுவ துப்பாக்கி எர்ணாகுளத்தில் மீட்பு

* கழிவுநீர் ஓடையில் வீசியதாக தீவிரவாதிகள் அடையாளம் காட்டினர்

நாகர்கோவில் : எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை எர்ணாகுளத்தில் கழிவுநீர் ஓடையில் வீசியதாக கைதான தீவிரவாதிகள் அடையாளம் காட்டினர். அங்கிருந்து நேற்று மீட்கப்பட்ட துப்பாக்கி ராணுவத்தினர் பயன்படுத்தக்கூடியது என்று போலீசார் தெரிவித்தனர்.  கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) கடந்த 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரை கைது செய்தனர்.  இவர்கள் மீது உபா சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை  10 நாள் காவலில் வைத்து விசாரிக்க நாகர்கோவில் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. வில்சன் கொலைக்கு துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன. விசாரணையில் இந்த கொலைக்கு துப்பாக்கி சப்ளை செய்தது பெங்களூருவை சேர்ந்த இஜாஸ் பாஷா என்பது தெரியவந்தது.

கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி யாரிடம் உள்ளது என்று தீவிரவாதிகளிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். எஸ்.பி நாத், விசாரணை அதிகாரி டிஎஸ்பி கணேசன் ஆகியோர் கொண்ட தனிப்படை இவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில் கத்தி மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை தப்பிச்செல்லும் போது வழியோரத்தில் வீசிவிட்டோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் நாகர்கோவிலில் நேசமணிநகர் காவல் நிலையம் பகுதியில் இருந்து வேனில் தீவிரவாதிகள் 2 பேரையும் கேரளா அழைத்து சென்றனர்.
எர்ணாகுளத்தில் உள்ள கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கழிவுநீர் ஓடையில் துப்பாக்கியை வீசியதாக கூறினர். அந்த கழிவுநீர் ஓடையில் கொச்சி மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் இறங்கி குமரி மாவட்ட போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது இத்தாலி தயாரிப்பு பிஸ்டல் ஆகும். அதில் 5 குண்டுகள் மீதம் இருந்தன. ஏற்கனவே 5 குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தது.

எனவே இந்த துப்பாக்கி எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் போலீசார் உறுதி செய்தனர். அதே வேளையில் இந்த துப்பாக்கி ராணுவத்தினர் பயன்படுத்தும் துப்பாக்கி எனவும், அதில் ‘ஒன்லி பார் ஆர்மி யூசேஜ்’ என குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் ேபாலீசார் தெரிவித்தனர். ராணுவத்தினர் பயன்படுத்தும் துப்பாக்கி தீவிரவாதிகள் கைவசம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கி கைப்பற்றப்பட்ட நிலையில் தீவிரவாதிகள் இருவரும் மீண்டும் குமரி மாவட்டம் அழைத்துவரப்பட்டனர்.


Tags : murder ,Ernakulam ,Israeli ,SSI ,rescue , Israeli-made, military rifle, SSI's murder was a rescue,Ernakulam
× RELATED இஸ்ரேல் விமான தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் பலி