சென்னை: மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பிப்ரவரி 25ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி மற்றும் கட்டிட தொழிலாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி மற்றும் கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் பொன்குமார் தலைமை தாங்கினார். இதில், உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை திமுக அணிக்கு தேடித் தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள். தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக இயற்றப்பட்ட 44 தொழிலாளர்கள் நலச்சட்டங்களை சுருக்கி 4 தொகுப்புகளாக (குறியீடு) மாற்றிட முனைந்துள்ள மத்திய மோடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தொழிலாளர்கள் சட்டங்களை மறுசீரமைக்கும் முயற்சியை குறிப்பாக நலவாரியங்களை மாற்றியமைக்கும் முயற்சியை மத்திய மோடி அரசு கைவிட வேண்டும். இதனை கண்டித்தும், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், இந்தியக் குடிமக்கள் பதிவேடு திட்டம் போன்ற மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், நலவாரியப் பணிகள் முடக்கம், நலவாரிய நிதியை அம்மா உணவகத்திற்கு மாற்றம் போன்ற மாநில அரசின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளை கண்டித்தும் வருகிற பிப்ரவரி 25ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பும் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.