சென்னை: பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த ரஜிகாந்த், அவரே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தம் வாழ்நாள் முழுவதும் மனித சமூகத்தின் மறுமலர்ச்சிக்காக சுயமரியாதை வாழ்வுக்காக போராடியவர் தந்தை பெரியார். சமூக நீதிக்காகப் போராடி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்தவர். தமிழர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வியலுடன் இரண்டறக் கலந்து இருக்கிற தலைவர் தந்தை பெரியார் குறித்து நண்பர் நடிகர் ரஜினிகாந்த், கூறிய கருத்துகளை, திக தலைவர் கி.வீரமணி ஆதாரப்பூர்வமாக மறுத்து இருக்கிறார்.
அதன் பிறகும் தாம் தெரிவித்த செய்திக்காக வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்று கூறி இருக்கும் ரஜினிகாந்த், ‘இவை மறக்கக் கூடிய நிகழ்வுகள்’ என்று மட்டும் கூறுகிறார். மறக்க வேண்டிய நிகழ்வுகளை ஏன் இவர் இப்போது நினைவூட்டுகிறார் என்ற கேள்வி எழுகிறது. தந்தை பெரியார் குறித்து அவதூறாகக் கருத்துக் கூறும் எண்ணம் தனக்கு இல்லை என்றுகூட ரஜினிகாந்த் கூற மறுப்பது எதனால்? எய்தவர்கள் யார்? என்று தமிழ்நாட்டு மக்கள் நினைப்பது இயற்கையே. தொடங்கி வைத்தது ரஜினிகாந்த். அவரேதான் இதற்கு முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.