×

குமரியில் 2 பேர் அடித்து கொலை?

மார்த்தாண்டம்: குமரியில் ஆறு மற்றும் பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்தவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டார்களா? என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மார்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (45). பழை வாகனங்கள் வாங்கி விற்கும் புரோக்கர் தொழில் செய்து வந்தார். இன்று காலை குழித்துறை பாலம் அருகில் ஆற்றில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து களியக்காவிளை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

பின்னர் இது குறித்து குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து மீட்புபடை வீரர்கள் வந்து உடலை மீட்டனர். ஆற்றில் பிணமாக கிடந்த மணிகண்டனின் உடலில் காயங்கள் உள்ளன. எனவே அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்து ஆற்றில் வீசி சென்றார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் நாகர்கோவில் ராமன்புதூர், கலுங்கு ஜங்ஷனில் பூட்டிய வீட்டில் இன்று காலை முதல் கடுமையான துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் சென்று பார்த்தனர். அப்போது வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்ததும் நாகர்கோவில், நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் ஒன்று காணப்பட்டது. விசாரணையில் அழுகிய நிலையில் காணப்பட்ட ஆண் சடலம் 3 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது.

வீட்டில் வசித்து வந்த நபர் வீட்டை பூட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Kumari 2 ,Kumari , Kumari, 2 people, beaten and killed
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து