ஐதராபாத்: திருப்பதி ஏழுமலையான் உள்ளிட்ட இந்து கடவுள்களுக்கு திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின்கீழ் குடியுரிமை வழங்கவேண்டும் என சில்கூர் கோவில் தலைமை அர்ச்சகர் ரங்கராஜன் கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் அருகே உஸ்மான்சாகர் ஏரிக்கரை அருகில் சில்கூர் பாலாஜி கோவில் உள்ளது. வெளிநாடு செல்ல விசா கிடைக்க விரும்புபவர்கள் சில்கூர் கோவிலில் பெருமாள் காலடியில் தங்களது பாஸ்போர்ட்டுகளை வைத்து வணங்கினால் விசா விரைவில் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
இதுகுறித்து தலைமை அர்ச்சகர் ரங்கராஜன் கூறியதாவது: கடவுள்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அர்ச்சகர், அறங்காவலர் அல்லது நிர்வாக அதிகாரி போன்ற நட்பு நபர்கள் மூலம்தான் நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்ய முடியும். எனவே திருப்பதி ஏழுமலையான், சில்கூர் பாலாஜி, ஐயப்ப சாமி, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி உள்ளிட்ட அனைத்து இந்து தெய்வங்களுக்கும், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் பிரிவு 5(4)-ன் கீழ் குடியுரிமை வழங்க வேண்டும்.
அனைத்து தெய்வங்களையும் குடிமக்களாக அரசு பதிவு செய்ய வேண்டும். சபரிமலை கோவில் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, இந்துக்களின் மத சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை காட்டுகிறது. அரசியலமைப்பு விதிகள் மற்றும் நீதித்துறையின் உத்தரவுகள் இருந்தபோதிலும், இந்து கோவில்கள் மற்றும் மத அறக்கட்டளை நிறுவனங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதாக அவர் தெரிவித்தார்.