×

குடியுரிமை சட்டம் பற்றி விவாதம் அமித்ஷா சவாலை ஏற்றார் மாயாவதி

லக்னோ: சிஏஏ பற்றி விவாதிக்க தயாரா என்ற அமித்ஷாவின் சவாலை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஏற்பதாக அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நேற்று முன்தினம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது, ராகுல் காந்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் பொதுவெளியில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதிக்க தயாரா என சவால் விடுத்தார். இந்நிலையில், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அரசின் சவாலை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மாயாவதி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, இளைஞர்களும் பெண்களும் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிராக அரசு விடுத்த சவாலை ஏற்க பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது. எந்த தளத்தில் வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் விவாதிப்பதற்கு தயாராக இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Mayawati ,Amit Shah , Mayawati challenges Amit Shah's ,citizenship law
× RELATED வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு