திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் சிக்கிய 45 லட்சம் ெநடுஞ்சாலைத்துறை அதிகாரிக்கு லஞ்சமாக கொடுக்க கொண்டு வந்த பணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவனந்தபுரம் தம்பானூர் மத்திய ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணத்துடன் ஒருவர் நின்று கொண்டு இருப்பதாக ரயில்வே போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே ரயில்வே இன்ஸ்பெக்டர் ஆசாத் தலைமையிலான போலீசார் ரயில் நிலையம் மற்றும் அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது ஒருவரிடம் இருந்த பையில் கட்டுக்கட்டாக 2000, 500 நோட்டுகள் இருந்தன. அவரிடம் மொத்தம் 45 லட்சம் இருந்தது. விசாரணையில் பெங்களூரு ஏலகங்கா பகுதியைச் சேர்ந்த கங்காராஜ் (42) என்று தெரியவந்தது. மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க கொண்டு வந்த பணம் என்பதும் தெரியவந்தது.
வட மாநிலத்ததை சேர்ந்த இந்த உயர் அதிகாரி கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கான முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார். சாலைகள் அமைப்பது தொடர்பான முக்கிய கோப்புகளில் இவர் கையெழுத்திடும் அதிகாரத்தில் உள்ளார். எனவே காண்டிராக்டர்கள் யாராவது இவருக்கு பணத்தை அனுப்பி வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. அந்த அதிகாரி பெங்களூருவில் நிலம் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக இந்த பணத்தை ரயில் மூலம் பெங்களூருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மத்திய உளவுத்துறை போலீசாரும் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த அதிகாரி ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் போலீசார் விசாரணைக்கு பிறகு கங்காராஜை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.