சென்னை: ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த பயணியை காப்பாற்றிய ஆர்பிஎப் தலைமை காவலர் விஜயகுமாரை உயரதிகாரிகள், பயணிகள் பாராட்டினர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு தாதர் எக்ஸ்பிரஸ் நேற்று காலை 6.45 மணியளவில் 8வது நடைமேடையில் இருந்து புறப்பட்டு மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் முன்பதிவு செய்த பயணி ஒருவர், முதுகில் பேக்கை மாட்டிக்கொண்டு ஓடிச்சென்று அந்த ரயிலில் ஏற முயன்றார்.
அப்போது அவர் நிலைதடுமாறி ரயில் படிக்கட்டில் உள்ள கம்பியை பிடித்து தொங்கியவாறு ரயிலில் சென்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்பிஎப் தலைமை காவலர் விஜயகுமார் ஓடி சென்று, அவர் கீழே விழாமல் ரயில் பெட்டிக்குள் தள்ளி பாதுகாப்பாக ஏற்றிவிட்டார். இதனை தொடர்ந்து ரயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தை பார்த்த ரயில் நிலையத்தில் இருந்த மற்ற பயணிகள் மற்றும் உயரதிகாரிகள் காவலரை பாராட்டினர்கள். இச்சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.