×

தீபாவளி சீட்டு பணத்துடன் பெண் தலைமறைவு காவல் நிலையத்தை மக்கள் முற்றுகை: அமைந்தகரையில் பரபரப்பு

அண்ணாநகர்: அமைந்தகரை, ராஜலட்சுமி காலனி, 3வது தெருவை சேர்ந்தவர் சொப்னா (43). இவர், அப்பகுதியில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான மாதாந்திர தவணை சீட்டு திட்டத்தை நடத்தி வந்துள்ளார். இந்த திட்டத்தில் அண்ணாநகர், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 120 பெண்கள் மாதந்தோறும் ரூ.100 வீதம் பணம் கட்டி வந்துள்ளனர். ஆனால் தீபாவளிக்கு முன்பு இருந்தே சொப்னா பணம் கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். பின்னர் அந்த பணத்தை பொங்கல் பண்டிகையின்போது தருவதாக சீட்டு கட்டியவர்களிடம் சொப்னா உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் பொங்கல் தினத்துக்கு முன்பே லட்சக்கணக்கான பணத்தை சுருட்டிக்கொண்டு சொப்னா தலைமறைவாகிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் அமைந்தகரை காவல் நிலையத்தை நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டு, சீட்டு பணத்தை ஏமாற்றிய பெண்ணை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘‘தீபாவளி சீட்டு பணத்தை தராமல் ஏமாற்றிய பெண் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதி அளித்தனர். இதனை ஏற்ற அப்பகுதி பெண்கள் தீபாவளி சீட்டு மோசடி செய்த சொப்னா மீது புகாரளித்துவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சொப்னாவை தேடி வருகின்றனர்.

Tags : Diwali , Diwali slip, woman, beheading, police, people, siege
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...