பெங்களூரு: மங்களூரு விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்து விட்டு தலைமறைவாகி இருக்கும் மர்ம மனிதனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக என்எஸ்ஜி, ஏடிஎஸ். அதிகாரிகள் விசா ரணை தொடங்கி உள்ளனர். மங்களூரு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 10 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது, ேதசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக, மாநில அரசுகளை மத்திய உளவுத்துறை எச்சரித்துளளது, இதுபோன்ற நிலையில், மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது பரபரப்பை அதிகமாக்கி உள்ளது.
இந்நிலையில், விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து விட்டு தலைமறைவாக இருக்கும் மர்ம மனிதரை கண்டுபிடிப்பதற்காக மூன்று சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பல இடங்களில் தேடி வருகிறார்கள். மேலும், விமான நிலையத்திற்கு வரும் அனைத்து சாலைகளிலும் பொருத்தியுள்ள சிசி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். விமான நிலையம் அருகில் மட்டுமில்லாமல், சாலைகளில் உள்ள பெரிய கடைகள், மால்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 20க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்புகார் தொடர்பாக மர்ம நபரை கைது செய்வதற்காக 3 தனிப்படை அமைத்துள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி), தீவிரவாத தடுப்பு படை (ஏடிஎஸ்) அதிகாரிகள், மங்களூருவில் விசாரணை தொடங்கி உள்ளனர்.