×

ஊத்துக்கோட்டை, பெரியவண்ணாங்குப்பம் கிராமத்தில் தேர்தல் தகராறில் கோஷ்டி மோதல்

* வாலிபரின் வயிறு குத்திக்கிழிப்பு
* ஊராட்சி பெண் தலைவருக்கு வலை

சென்னை:  ஊத்துக்கோட்டை , பெரியவண்ணாங்குப்பத்தில் வசித்து வருபவர் அமுதா. அதே பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்.  இருவரும் நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் அமுதா வெற்றி பெற்றதால் பகை ஏற்பட்டது. நேற்று முன்தினம் சசிகுமாரின் ஆதரவாளர் நீலமேகம் என்பவர் அமுதாவின் மகன் ஆனந்தனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர்  சமாதானம் பேசி நீலமேகத்தை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அமுதாவின் மற்றொரு மகன் அரவிந்தன் வந்து, நீ எப்படி  என் அண்ணனை தகாத வார்த்தைகளால்  திட்டலாம்?’’ என நீலமேகத்திடம் தகராறு செய்துள்ளார். இதையறிந்த சசிகுமார், தனது ஆதரவாளர்கள் ரஞ்சித்குமார் (25), அருணகிரி அவரது மகன் ஞானமூர்த்தி, லட்சுமணன், திருமூர்த்தி ஆகியோருடன் வந்தார். அதே நேரத்தில் அரவிந்தனுக்கு ஆதரவாக அவரது அண்ணன் ஆனந்தன், உறவினர்கள் நீலநாதன், மது, தாயாரும் ஊராட்சி மன்றத் தலைவருமான அமுதா ஆகியோரும் திரண்டனர்.

பின்னர் ஒருவரை ஒருவர் கத்தி மற்றும் உருட்டு கட்டை போன்ற  ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில் ரஞ்சித்குமாரின் வயிறு கிழிந்தது.  தகவலறிந்து ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் ரமேஷ்,  எஸ்.ஐ ராக்கிகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரஞ்சித்குமாரை மீட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில்  சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி வழக்கு பதிந்து இருதரப்பையும் சேர்ந்த அரவிந்தன் (27), ஆனந்தன் (32), நீலநாதன் என்ற சேட்டு (39), அருணகிரி (48),  அவரது மகன் ஞானமூர்த்தி (20), லட்சுமணன் (30) ஆகிய 6 பேரையும் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான ஊராட்சி மன்ற பெண் தலைவர் அமுதா, அவரது உறவினர் மது, சசிகுமார், திருமூர்த்தி, ரஞ்சித்குமார், நீலமேகம் ஆகிய 6 பேரை  தேடி வருகின்றனர்.


Tags : village Election clash ,village , Election clash ,Periyavannankuppam village
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...