மூணாறு: மூணாறு அருகே மது போதையில் இருந்த தந்தை, தனது 9 வயது மகனை வைத்து கார் ஓட்டியபோது, தம்பதி படுகாயமடைந்தனர். கேரள மாநிலம், மூணாறு அருகே ராஜக்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11.20 மணியளவில் பொன்முடி பகுதியில் ஒரு கார் அதிவேகமாக சென்றது. இந்த கார், முன்னால் டூவீலரில் சென்ற தம்பதி மீது மோதியது. இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. காயமடைந்த தம்பதி ராஜக்காடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்திற்கு பின்னர் நிற்காமல் சென்ற கார் எதிரே வந்த கார் மீது மோதியது. ெதாடர்ந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார் மீது மோதியது. நிற்காமல் வேகமாக சென்ற காரை அப்பகுதியில் உள்ள வாகனங்களின் டிரைவர்கள் தடுத்து நிறுத்தினர்.
டிரைவர்கள் காரை முற்றுகையிட்டபோது, டிரைவர் சீட்டில் மது போதையில் தந்தை இருந்ததும், 9 வயது சிறுவன் காரை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. உடனடியாக அப்பகுதியில் உள்ளவர்கள் ராஜக்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் பரிசோதித்ததில் காரில் இருந்த 3 பேர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் தந்தையான இடுக்கி மாவட்டம், சேனாபதி பகுதியை சேர்ந்த பென்னி (எ) ஜோசப் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.