×

நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 8 மலையாளிகள் ஓட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீசார் விசாரணை!

டாமன்: நேபாளத்திற்கு சென்ற கேரளாவைச் சேர்ந்த 8 சுற்றுலா பயணிகள் ஓட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாமன் என்ற இடத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த 8 பேரும் காலையில் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், மாற்று சாவி மூலம் அறையை திறந்து பார்த்தபோது 8 பேரும் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் யார் என்பது குறித்து அறிய கேரள மாநில போலீசாரின் உதவியை நாடியுள்ளதாக மக்வான்பூர் மாவட்ட எஸ்.பி. சுஷில் சிங் ராத்தோர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்கள் 8 பேர் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிரவின் குமார் நாயர்(39), சரண்யா(34), ரஞ்சித் குமார்(39), இந்து ரஞ்சித்(34), ஸ்ரீபத்ரா(9), அபினவ் சூர்யா(9), அபி நாயர்(7) மற்றும் வைஷ்னவ் ரஞ்சித்(2) என்பது தெரியவந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நேற்றிரவு கேஸ் ஹீட்டரை பயன்படுத்தினர் என்றும், அதில் ஏற்பட்ட வாயு கசிவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இவ்விகாரம் குறித்து பேசிய ரிசார்ட்டின் மேலாளர், உயிரிழந்த 8 பேர் உள்பட மொத்தம் 15 பேர் சேர்ந்து 4 அறைகளை முன்பதிவு செய்திருந்ததாகவும், எனினும் இந்த 8 பேர் மட்டும் ஒரே அறையில் தங்கியிருந்ததாகவும் தெவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், அறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. ரிசார்ட் ஊழியர் அவர்களை மயக்க நிலையில் கண்டுள்ளார். ஆனால், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே இறந்துவிட்டனர். காற்றின் பற்றாக்குறை காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பனிக்காலம் என்பதால் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், அந்த அறையில் மோசமான காற்றோட்டம் இருந்துள்ளது என கூறியுள்ளார்.


Tags : Malayalees ,Nepal ,hotel room , Nepal, Daman, Malayalis, death
× RELATED மனதை ஒருநிலைப்படுத்தும் மண்டாலா ஓவியங்கள்!