வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் நோய் தீர்க்கும் அரசு மருத்துவமனை முன்பு நோய் ஏற்படுத்தும் சாக்கடை இருப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி ஏராளமானோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு நுழையும் இடத்தையொட்டி பெரிய சாக்கடை செல்கிறது. அந்த சாக்கடை மூடப்படாமல் உள்ளதால் அடிக்கடி சாக்கடை அடைத்து கழிவுநீர் வெளியேறி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் கார் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தும் இடம் உள்ளது. ஆட்டோ எடுக்க வருகின்றவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே வத்தலக்குண்டு பேரூராட்சியினர் சாக்கடை தண்ணீர் தங்குதடையின்றி செல்லவும், துர்நாற்றம் வீசாமல் சாக்கடையின் மேல் சிமிண்ட் பலகைகள் போடவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி சமூக ஆர்வலர் பாக்யராஜ் கூறுகையில், ‘நோய்களை தீர்க்கும் அரசு மருத்துவமனை முன்பு நோய்களை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை திறந்து கிடப்பதும், அடிக்கடி நிரம்பி வழிவதும் வேதனைக்குரியது. பேரூராட்சியினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.