×

மாநகரில் 136 கி.மீக்கு மெட்ரோ ரயில் இறுதிகட்ட ஆய்வு பணி நடக்கிறது

கோவை: கோவை நகரில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த இந்த திட்டம் பல ஆண்டாக கால தாமதமாகி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக தனியார் நிறுவனத்தின் சார்பில் சாத்தியக்கூறு ஆய்வு பணி நடத்தப்பட்டது. இந்த பணிகள் முடிந்து மத்திய அரசு மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் திட்டம் செயல்படுத்த சாத்தியமுள்ள வழிதடங்கள் குறித்து அறிக்கை வழங்கப்பட்டது. நகரில் உக்கடம், கணியூர் வரை 26 கி.மீ தூரத்திற்கும், உக்கடம் முதல் காரமடை பிளிச்சி கிராமம் வரை 24 கி.மீ தூரத்திற்கும், திருச்சி ரோட்டில் காரணம்பேட்டை முதல் தடாகம் ரோடு தண்ணீர் பந்தல் வரை 42 கி.மீ தூரத்திற்கும், சத்தி ரோடு கணேசபுரம் முதல் பேரூர், காருண்யா நகர் வரை 44 கி.மீ தூரத்திற்கும் மெட்ரோ வழித்தட பாதை அமைக்க முடியும். நகரில் 136 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்தை 4 காரிடார் மூலமாக செயல்படு–்த்த முடியும் என ஆய்வு செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை அமலாக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து டெண்டர் விட்டு பணிகளை செயல்படுத்தும் வகையில் இறுதி கட்ட ஆய்வு பணி நடக்கிறது. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆணையகம் போன்ற துறைகளிடம் தடையின்மை சான்று பெற்று பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவை நகரில் உக்கடத்தில் 1.9 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. வெள்ளலூரில் 168 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி விரைவில் துவக்கப்படவுள்ளது. திருச்சி ரோட்டில் 3.7 கி.மீ தூர மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. அவினாசி ரோட்டில் 9.7 கி.மீ தூரத்திற்கு எலிவேட்டர் காரிடார் என்ற உயர் மட்ட தொலை தூர பாலம் அமைக்கும் பணி நடத்தப்படவுள்ளது. தற்போது நடத்தப்படும் பாலம், ரோடு பணிகளால் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் மேம்பாலம், மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடத்தினால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாது. நகரின் மையப்பகுதியில் இருந்து குக்கிராமம் வரை மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படவுள்ளது. குறிப்பாக பஸ் வசதி அரிதாக உள்ள பிளிச்சி கிராமத்திற்கு மெட்ரோ ரயில் செல்லவுள்ளது. இந்த திட்டம் அமலானால் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் 50 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இந்த திட்டம் விரைவில் இறுதி செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறையினர் கூறுகையில், ‘‘ ரோடு கட்டமைப்பு பணிகள் மெட்ரோ ரயில் பணிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கவேண்டியுள்ளது. அவினாசி ரோட்டில் மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் பணிகள் ஒரே நேரத்தில் நடத்த முடியுமா, மேம்பால பில்லரில் மெட்ரோ ரயில் கட்டமைப்பு உருவாக்க முடியுமா என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி ரோடு மெட்ரோ ரயில் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. ஆனால் உக்கடம் முதல் சுங்கம் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சில சிக்கல் இருக்கிறது. உக்கடம் முதல் சுங்கம் வரை மேம்பாலத்தை நீட்டிப்பது தொடர்பான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது, ’’ என்றனர்.


Tags : Metro Rail ,city , Metro Rail, final inspection work , 136 km
× RELATED மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக...