சென்னை: தேனியில் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக, தமிழக அரசு தரப்பில், தேனி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த மேல் முறையீட்டு மனுவை திரும்பப் பெறவுள்ளதாக தெரிவித்தார்.
இதைக்கேட்ட தலைமை நீதிபதி, மேல் முறையீட்டு மனுவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது என்பதால் அபராதம் விதிக்கலாம். எதிர்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும் என்று துணை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி விவாதிக்க நீதிமன்றம் இடமாகாது. இதையடுத்து, நீதிபதிகள், அரசியல் சாசனம் தொடர்பான கேள்வி எழுந்தால் மனுவை வாபஸ் பெறுவதில் பிரச்னை இல்லை. இதுபோன்று எதிர்காலத்தில் நடைபெறாது என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது. எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற அனுமதி கோரும் மனுவை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரரே முன்வந்து மனுவை வாபஸ் பெறுவதாக கேட்டுக் கொண்டதால் அபராதம் விதிப்பதை தவிர்க்கிறோம் என்று உத்தரவிட்டனர்.