×

விவசாயிகள் கடும் எதிர்ப்பு: ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த புதிய முடிவை திரும்பப் பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டம் சம்பந்தமான மத்திய அரசின் புதிய முடிவை திரும்பப் பெறவேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். காவிரிப் படுகையை இரண்டு மண்டலங்களாகப் பிரித்து  மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் அனுமதி அளித்திருக்கிறது. பிரிவு 1ல், விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது.  பிரிவு 2ல் கடலூர் முதல் நாகப்பட்டினம் வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகளும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது.

ஹைட்ரோ கார்பன் எடுக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மத்திய அரசு இறங்கியது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திட்டத்திற்கு எதிராகவும், திட்டத்தை கைவிட கோரியும்  விவசாயிகள்,  பொதுமக்கள் சாகும்வரை போராட்டம், வயல்களில் இறங்கி போராட்டம், மனித சங்கிலி போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள், பல்வேறு  அமைப்பினர், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை முறையாக பெற வேண்டும். அதேநேரத்தில் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துக்  கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது இதுவரை இருந்து வந்த விதிமுறை. ஆனால் இதற்கு மாறாக சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006-இல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இதன்படி ஹைட்ரோகார்பன்  ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு இனி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற வேண்டியது கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தப் பிரச்னை சம்பந்தமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு  விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் துறை அனுமதி மற்றும் மக்களின் கருத்தை கேட்கத் தேவையில்லை என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் பெரும்பாலான ஹைட்ரோ கார்பன்  திட்டங்கள் டெல்டா பகுதியிலே அமைந்துள்ளது. மேலும், டெல்டா பகுதி தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கி வரும் பகுதி. சுற்றுச்சூழல் துறை அறிக்கை அனுப்பும் முன் தமிழக அரசுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. டெல்டா பகுதி  மக்களின் கருத்துகளை கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Modi Pranasamy ,Modi , Pranasamy's letter to Prime Minister Modi
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...